Skip to main content

Story of the Photo 03: Samosa Men of Tiruvannamalai

சமோசா பாயும் பையாவும்


     தேரடி வீதியில் TVS XLலில் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது எனது வலது புறத்திற்கு எதிரே கொஞ்சம் தூரத்தில்
இவர் வந்து கொண்டிருந்தார். சிறுவயதில் இருந்து பார்த்து. வருகிறேன் சட்டென ஒரு யோசனை, இவரை ஏன் ஒரு புகைப்படம் எடுக்கக் கூடாது எனத் தோன்றியது. உடனே வண்டியை இடது பக்கம் ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, வண்டிக்கு பூட்டு போட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு சாலையை கடந்தேன். புகைப்படம்  எடுப்பதை அவர் பார்த்து விட்டால் ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று தயங்கினேன். அதனால் பின் பக்கமாக இருந்து எடுக்கத் திட்டமிட்டேன். அவருக்குப் பின்னால் மூன்றடி இடைவெளி விட்டு பின்தொடர செய்ய ஆரம்பித்தேன்.

வேகமாக போனை அன்லாக் செய்து கேமராவை ஆன் செய்து பிரேமை வைத்தேன். அதே மூன்றடி  இடைவெளியுடன் அவரின் வேகத்திற்கு இணையாக நடந்துகொண்டே ஒரு படம் எடுத்தேன். எடுக்கும்போதே தெரிந்தது, படம் சிறப்பாக அமையவில்லை. அடுத்த படத்திற்கு முயற்சி செய்து கொண்டிருந்த​ நொடி அவர் பூம்புகார் துணியகத்தை கடந்துக்கொண்டு இருந்தார். அந்நேரம் கடையில் இருந்து  தாய்மார்கள் இருவர் வெளியே வந்துகொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவர் என்னை கவனித்துவிட்டார். தன்னுடன் இருப்பவரிடம் "சமோசா விக்கிறவர போட்டோ எடுக்கிறான் பாரு இந்த பையன்" அப்படின்னு சிரித்த முகத்துடன் வேடிக்கையாக சொன்னதை என்னால் கவனிக்க முடிந்தது. "ஆமாம்" என்பதுபோல மெல்லிய புன்னகையை அவருக்கு பதிலாக அளித்துவிட்டு என்னுடைய நோக்கத்தில் கவனத்தை செலுத்தினேன்.

அடுத்து ஒரு புகைப்படம் சரியான கோணத்தில் சரியான வெளிச்சத்தில் எடுத்தேன். நன்றாக வந்தது போலவே​ தெரிந்தது. புகைப்படம் எடுக்கும் முயற்சி வெற்றி அடைந்து விட்டதாக கருதி வண்டியை விட்ட இடத்தை நோக்கி ஓடினேன். வண்டியிடம் சென்ற பின்பு நிதானமாக எடுத்த படத்தை பார்த்தேன். படம் மிகச் சரியாக வந்திருந்தது. ஆனால் நடந்து கொண்டே படம் எடுத்ததால் கொஞ்சம் ஷேக் ஆகி இருந்தது. முயற்சி முழு பலனை எட்டவில்லை. கொஞ்சம் ஏமாற்றம். மீண்டும் அதே மாதிரி அவரை பின் தொடர்ந்து எடுக்கலாம், ஆனால் அடிக்கடி போக்குவரத்து காவல் துறையினர் ரோந்து வரும் சாலை என்பதால் அடுத்த முயற்சியை அப்படியே விட்டு விட்டேன்.

என்னுடைய பத்து வயதிலிருந்து இவரை பார்த்து வருகிறேன். ஒல்லியான தேகம், வெயிலில் காய்ந்த கருமை நிறத் தோல், ஒட்டிய கன்னங்கள், எண்ணெய் வடியும் முகம், தேங்காய் நார் போல நீண்ட தாடி, வெலுத்துப்போன உடை. தோலில் பெரிய அலுமினிய தாம்பாளத் தட்டு, அதில் கல்யாண சீர் வரிசையில் அடுக்கி வைத்தாற்போல் சமோசாக்கள்.
சமோசாக்களை மடித்து கொடுக்க
தட்டிற்கடியில் கொஞ்சம் செய்தித்தாள்கள்.

பெரும்பாலும் முழுக்கை சட்டையே அணிந்திருப்பார். இவர் காலணிகள் அணிந்து  பார்த்ததில்லை. குதிகால் அருகிலிருக்கும் பேண்ட் துணி புலி கீறியதுபோல் தேய்ந்து இருக்கும். காலை 9 மணிக்கு சமோசா தட்டை தோளில் சுமந்துகொண்டு ஊரில் உள்ள பிரதான சாலை வழியாக "சமோசா...சமோசா..." எனக் கூவிக்கொண்டே விற்பனையை ஆரம்பித்துவிடுவார். மாலை வேளையில் பார்க்கும்போது முக்கால்வாசி தட்டு காலியாகி இருக்கும்.

பள்ளிக்கும் டியூசனுக்கு போகும் போது இவரை பார்ப்பதுண்டு. மாதத்தில் நான்கு முறையாவது பார்த்துவிடுவேன். பெரும்பாலும் கட்டபொம்மன் தெரு, சன்னதி தெரு, பைபாஸ் சாலை, முகல்புறா தெரு போன்ற பகுதிகளிலேயே அதிகம் பார்த்து இருக்கிறேன்.

ஒருமுறை டியூசனுக்கு கீழ்நாத்தூர் சாலை வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது பூட்டிய கடை முன் அமர்ந்து கொண்டு மீதமுள்ள சமோசாக்களை ஒரு பக்கமாக அடுக்கி கொண்டு இருந்தார். தலையில் ஒயர் கூடையுடன் நடந்து வந்த ஒரு கிராமத்துப் பெண் அவரை பார்த்ததும் தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த சுருக்கு பையிலிருந்து பத்து ரூபாய் கொடுத்து சமோசாக்களை வாங்கிக்கொண்டு சென்றார்.

இவரை அமர்ந்த நிலையிலும்,
விற்பனை செய்த காட்சியையும்
பார்த்தது அதுவே முதலும் கடைசி. இன்றுவரை அவர் வேகமாக நடந்து கொண்டு போகும் நிலையிலேயே தான் பார்த்து வருகிறேன்.

சரி இப்போது சமோசாவின் கதைக்கு வருவோம்.

இந்தியாவின் புவியியல் ரீதியாக சமோசாக்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று வடநாட்டு சமோசா, இன்னொன்று தென்னாட்டு சமோசா.

வடநாட்டு சமோசா அளவில் பெரியதாக இருக்கும். உருண்டைக்கு மூன்று மூக்கு வைத்தாற்போல் இருக்கும். உள்ளே பெரும்பாலும் உருளைக்கிழங்கு பட்டாணி மசாலாவே இருக்கும். கவனித்துப் பார்த்தால் அந்த வகை சமோசாவில் வெங்காயத்தையும் பூண்டையும் பார்க்கவே முடியாது. இந்திய மக்களில் சிலர் தங்கள் உணவில் வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்துக் கொள்வதில்லை. குறிப்பாக கிருஷ்ணரை வணங்குபவர்கள் அந்த கட்டுப்பாட்டை பின்பற்றுவது வழக்கம். ஒருவேளை இந்த சமோசாக்களை அவர்கள் உருவாக்கியதாக இருக்கலாம்.

பையா! தோ சமோசா.


திருவண்ணாமலை சன்னதி தெருவில் "ராஜம் மருத்துவமனைக்கு" அருகில் இந்த வகை சமோசா கடை பல வருடமாக இயங்கிவருகிறது.  சமோசா மட்டுமல்லாமல் கச்சோரி, ஜிலேபி போன்ற பண்டங்களும் கிடைக்கும். காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை கடை இயங்கும். தொன்னையில் ஒரு சமோசா/கச்சோரி வைத்து கட்டை விரலால் லேசாக அழுத்தி பச்சை சட்னி(காரச் சட்னி) சிவப்பு சட்னி(இனிப்பு சட்னி) போன்றவற்றை ஊற்றி தருவார் கடைக்காரர். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என கலந்து பேசும் அவரின் மென்மையான மொழி தனித்துவமாக இருக்கும். அவர் பயன்படுத்தும் வாக்கியங்கள்:
ஏக் சமோசா?
தோ சமோசா?
நாலா?
பாட்டி ரூபிஸ்!
சாப்பட அர் பார்சல்?

உரையாடலில் புரிதல் இல்லாமல் போகும் என்பதை உணர்ந்த அவர்
கூடுதல் பாதுகாப்பிற்காக எத்தனை சமோசா? எனக் கேட்கும்போதும், விலையை சொல்லும் போதும்  விரலில் எண்ணிக்கையை காட்டுவார். இவரிடம் உடல் மொழியில் பேசும் போது நமக்குள் இருக்கும் ஆதி மனிதன் வெளிவருவதை நன்றாக உணர முடியும். இயக்குனர் லிங்குசாமி அவர்களின் இயக்கத்தில் தம்பி நடித்த படத்தின் தலைப்பையும் அண்ணன் நடித்த படத்தின் பிரபலமான பாடல்​ வரியையும் சேர்த்து "பையா! ஏக் கச்சோரி, பையா! தோ சமோசா" என நம்ம மக்களும் இவரிடம் ஹிந்தியில் பேசி கெத்து காட்டுவார்கள்.

இரண்டு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு சாப்பிட்டு இருக்கிறேன். இன்று ஒரு சமோசாவின் விலை பத்து ரூபாய்.  இன்றும் அந்த கடை அதே இடத்திற்கு சற்று அருகில் இயங்கி வருகிறது. வியாபாரம் செய்யும் அளவிற்கு தமிழையும்​ கற்றுக்கொண்டு இங்கேயே தங்கி விட்டார். அவர் இல்லாதபோது அவரின் உதவியாளர்கள் கடையை பார்த்து கொள்வார்கள். "சேட்டுக்கடை சமோசா" என்ற பெயரில் ஊர்மக்களிடத்தில் இந்த சமோசா மிகவும் பிரபலம். இந்த சமோசாவை சாப்பிடாதா நகர மக்கள் யாரும் இருக்க முடியாது.

அடுத்ததாக தென்னாட்டு சமோசாவை பற்றி பார்ப்போம். இந்த சமோசாவின் மசாலாவை விருப்பத்திற்கு ஏற்றவாறு கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கோஸ், பச்சை பட்டாணி, வெங்காயம் போன்றவற்றை வைத்து செய்வார்கள். மிகவும் அரிதாகவே அசைவ சமோசாகளை பார்க்க முடியும். ஒருமுறை தர்மபுரிக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த ஒரு கடையில் சாதா சமோசா 5 ரூபாய்க்கும் சிக்கன் சமோசா 20 ரூபாய்க்கும் விற்பதை பார்த்து இருக்கிறேன்.

சமோசாவுக்கு மாவு சரியான பதத்தில் இருக்க வேண்டும். இல்லையென்றால் அதிகமான எண்ணெய்யை குடித்து விடும்.  மசாலாவை சரியாக வைத்து மடித்து எண்ணெய்யில் போட வேண்டும். இல்லையென்றால் சமோசாவிற்குள் எண்ணெய் புகுந்துவிடும். சில நேரங்களில் எண்ணெய்யிலேயே சமோசா உடைந்து விடும். பொறுமையுடன் பக்குவமாக செய்தால் வெற்றி(சமோசா) நிச்சயம் கிட்டும்.

இவ்வாறு சமோசா செய்வதில் சில சவால்கள் இருக்கிறது. அதே போல் சமோசாவை வாங்குவதிலும் சில சவால்கள் இருக்கிறது. அந்த சவால்களை பின்வரும் இரண்டு சம்பவங்கள் மூலம் பார்ப்போம்.

1) நாவினால் சுட்ட வடு

வெளியூர் செல்வதற்காக பேருந்தில் காத்துக் கொண்டிருக்கும் போது பிஸ்கட், சிப்ஸ், சோளப்பொரி, சுண்டல் என வியாபாரிகள் பேருந்துக்குள் வந்த வண்ணமிருந்தனர். "சூடான சமோசா நாலு பத்து ரூபாய்" எனக் கூவிக்கொண்டு பேருந்துக்குள் ஒரு இளைஞர் ஏறினார். எனக்கு முன்னே அமர்ந்து இருந்த பெரியவர் தன் சட்டைப்பையில் இருந்து பத்து ரூபாய்யை தேடி எடுத்து சமோசா வாங்க காத்துக்கொண்டு இருந்தார்.
இவர் ரூபாய் எடுப்பதை கவனித்த வியாபாரி "சமோசா... சமோசா.." எனக் கூவிக்கொண்டே இவரை நோக்கி வந்தார். காசை கொடுத்து சமோசாவை
வாங்கியவர் அடுத்த நிமிடமே "என்னப்பா சூடே இல்லனு" கேட்டார். அதற்கு அந்த வியாபாரி "அவ்வளவுதாங்க சூடு வரும்" அப்படின்னு சொல்லிட்டு நகர்ந்தார். "நான் சூடே இல்லைனு சொல்றேன், நீ அவ்ளோ தான் சூடு வரும்னு சொல்ற"னு சொல்லி கோபமடைந்தார். "பின்ன நீங்க குடுக்குற காசுக்கு சட்டிலிருந்து அப்படியேவா எடுத்து வர முடியும்"னு அவர் பதில் சொல்ல இருவருக்கும் வாய்ச் சண்டை முற்றியது.

இறுதியில் வெளியில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த நடத்துனர் உள்ளே வந்து வியாபாரியை பேருந்தை விட்டு இறங்கச் சொல்லி சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தூக்கி எறிய மனமில்லாமல் சமோசாக்களை மடித்து தன் கைப்பையில் வைத்துக்கொண்டார்.

2) மைசூர் போண்டா

திரையரங்கில் இடைவேளையின் போது கேண்டீனுக்கு அருகே நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது என் செவி ஒரு பெண்ணின் குரலை கவனித்தது.
"இதுல வெறும் வெங்காயம் மட்டும் தான் இருக்கு"னு 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கேன்டீன் ஊழியரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

அவர் கையில் பேப்பர் பிளேடில் இரண்டு சமோசாக்கள் இருந்தது. அதில் ஒன்று பிரித்து வைக்கப்பட்டு இருந்தது.

"எல்லா சமோசாவிலும் வெஜிடபிள் வராதுங்க,  கலந்துதான் வரும்" எனச் சொல்லி சமாளிக்க முயற்சி செய்தார்.

கோபம் அடைந்த இவர் இன்னொரு சமோசாவையும் அவர் கண்முன்னே பிரித்து காண்பித்தார். ஆதாரம் இருமடங்காக வலு பெற்றது. அதிலும் வெறும் வெங்காயம்​ மட்டும்தான் இருந்தது.

"எங்கே? வெஜிடபிள் இல்ல, வெறும் வெங்காயம் மட்டும் தான் இருக்கு"னு கோபத்துடன் சொன்னார். "வெறும்" என்ற சொல்லில் அவருடைய ஆதங்கமும் ஆத்திரமும் வெளிப்பட்டது.

கேண்டீன் ஊழியர் மௌனமாக இருந்தார்

"இந்த மாதிரி ஏன் ஏமாத்தறீங்க! வெளிய வாங்கினா அஞ்சு ரூபா கூட ஆகாது, இத போய் பத்து ரூபாய்க்கு​ விக்குறீங்க. வெஜிடபிள் சமோசானு பில் போடுறீங்க, ஆனா சமோசால வெறும் வெங்காயம் மட்டும் தான் இருக்கு"னு  சொல்லிவிட்டு விரக்தியுடன் அங்கிருந்து நகர்ந்து  சென்றுவிட்டார். மற்றவர்கள் யாரும் இந்த உரையாடலை கவனித்த மாதிரி தெரியவில்லை.

இந்த இரண்டு சம்பவங்களில் இருந்து நமக்கு சில கூற்றுகள் கிடைக்கிறது.

பிரச்சனையை எதிர்த்து ஒரே ஒரு குரல் மட்டும் இருந்ததால், அதற்கு அலட்சியமே பதிலாக கிடைக்கும்.

சூடான சமோசா என்று சொல்லி விற்பார்கள், அதில் சூடே இருக்காது. வெஜிடபிள் சமோசா என்று சொல்லி விற்பார்கள், அதில் வெஜிடபிளே இருக்காது. வெறும் வெங்காயம்​ மட்டும்தான் இருக்கும்.

இதுவும் ஒருவகையில் நுகர்வோரை ஏமாற்றும் செயலே. நம்மில் பலர் இதை கண்டுகொள்வதில்லை.
இது வழக்கமான ஒன்று தானே என நகர்ந்து விடுகிறோம்.

மிகவும் அரிதாகவே சூடான வெஜிடபிள் சமோசாவும் நியாயமும் கிடைக்கும்.

அசைவம் இஸ்லாமியர்களின் வாழ்வியலில் கலந்த ஒன்று என்பதை அனைவரும் அறிவர். எந்த ஊராக இருந்தாலும் அங்கு குறைந்தபட்சம் ஒரு இஸ்லாமியர்களின் அசைவ உணவகமாவது மக்களிடத்தில்
பிரபலமாக இருக்கும்.
உதாரணத்துக்கு பிரியாணி கடை  அல்லது மாலை வேளையில் தள்ளுவண்டியில் விற்கப்படும் சிக்கன் 65, பீப் பகோடா, ஆட்டுக்கால் சூப் போன்ற கடைகள்.

அப்படி இருக்கையில் இவர் இந்த சைவ சமோசாவை தேர்ந்தெடுப்பதற்கு சில காரணங்கள் இருப்பதாக நம்புகிறேன்.

அப்பொழுது ரம்ஜான் நோன்பு நேரம். மாலை ஆறு மணி இருக்கும். கோழி கொக்கரக்கோனு...
இல்ல இது வேற கதை. மாலை ஆறு மணி வாக்கில் மண்டி தெரு வழியாக சென்று கொண்டிருக்கும் போது வழக்கத்திற்கு மாறாக மசூதிக்கு அருகே பல வடை, சமோசா கடைகள் முளைத்து இருந்தது. மசூதிக்கு முன்னால் எதற்காக இத்தனை கடைகள்? அதுவும் வடை, சமோசா கடை யாருக்காக? எனக் கேள்வி எழுந்தது.

மற்றொரு நாள் அதே ரமலான் நோன்பு காலத்தில் வழக்கமாக வடை, பஜ்ஜி வாங்கும் சன்னதி தெரு கற்பக விநாயகர் கோயிலுக்கு பக்கத்தில் இருக்கும் கடையில் வடை வாங்குவதற்காக காத்துக்கொண்டிருந்தேன். எனக்கு முன் காத்துக் கொண்டு இருந்த இஸ்லாமியர்கள் அதிகமாக மசால் வடைகளை வாங்கிச் சென்றனர். மாலையில் அவர்கள் பருகும் நோன்புக் கஞ்சியுடன் வடை, சமோசா போன்ற பதார்த்தங்களை சேர்த்து உண்பது வழக்கம் என அவர்கள் போனபின்பு அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள். மசூதியின் முன் இருந்த கடைகளின் நோக்கமும் புரிந்தது. இப்படி நோன்பு நேரங்களில் உண்டு பழகிய சமோசா அவர்களுக்குப் பிடித்தமான ஒரு உணவாக மாறி இருக்கும் என நினைக்கிறேன்.


இப்போது சமோசா பாய் அவர்களின் கதைக்கு வருவோம். இவர் ஒரு நாளைக்கு எத்தனை சமோசாக்களை விற்கிறார்? இவ்வளவு சமோசாக்களை தயாரிக்க எவ்வளவு மணி நேரம் ஆகிறது? இவர் மட்டும்தான் தயாரிக்கிறாரா? இவருக்கு உதவியாளர் யாராவது இருக்கிறார்களா? ஒரு நாளைக்கு எவ்வளவு லாபம் வருகிறது? இவரின் பெயர் தான் என்ன?
இன்னும் இதுபோல் பல கேள்விகள் இவரைப் பார்க்கும் போதெல்லாம் எழும். ஆனால் இவரின் இறுக்கமான முகமும் என் தயக்க குணமும் இவரிடம் உரையாடலை ஏற்படுத்த முயற்சி செய்ததில்லை. பார்ப்போம்.

வெளிப்புற உணவுகளுக்கு எந்த மாதிரியான விமர்சனங்களை பொதுவாக வைக்கிறமோ, அதே விமர்சனம் இவருக்கும் பொருந்திப் போவது வருத்தத்திற்குரிய ஒன்று.

என்னுடைய வேண்டுகோள், தாம்பூலத் தட்டை வாழையிலை கொண்டோ அல்லது பருத்தித் துணியை கொண்டோ மூடி எடுத்துச் செல்லலாம்.
இவர் "அலுமினிய" தாம்பூலத் தட்டை பயன் படுத்துவதற்கு எளிமையான காரணம் ஒன்றும் இருக்கிறது. மற்ற உலோக தட்டை விடவும் அலுமினியம் எடையில் குறைவாக இருப்பதால்​ தான். எப்பொழுதும் தோளில் சமோசா தட்டை சுமந்த படி இருக்கும் இவரை ஒரே ஒரு முறை மட்டும் விற்றுத் தீர்ந்த தட்டுடன் கையை வீசி நடந்து செல்வதை பார்த்து இருக்கிறேன்.

சோன்பப்படி, பஞ்சுமிட்டாய்,  சேமியா ஐஸ், பாம்பே பாதாம் குல்பி போன்ற சில தனித்துவமான உணவு வியாபாரிகளை தெருவில் விற்பனை செய்வதை பார்த்தே வளர்ந்திருப்போம். அவர்களில் பலரை இப்போது பார்க்க முடிவதில்லை. ஒருவேளை  அவர்களைப் எங்காவது பார்த்தால் "இவரை எத்தனை வருடமாக பார்த்து வருகிறேன் தெரியுமா!" என்று நினைப்பு நிச்சயம் அனைவருக்குள்ளேயும் வரும். அவர்களில் சிலர் தங்கள் வியாபாரத்தில் வெள்ளிவிழாவை கடந்தும் இருக்கலாம். ஒரு சிலரை மட்டும் திருவிழா நேரங்களில் பார்க்க முடிகிறது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியம் இருக்கும். இந்த வியாபாரிகளுக்கு தினமும் ஒரே லட்சியம் தான் பிரதானமாக இருக்கும். தாங்கள் தயாரித்த உணவு பண்டங்களை எப்படியாவது முழுவதுமாக விற்று தீர்ப்பதே ஆகும்.


1st Photo:
13/01/2019
Moto E4 Plus

2nd Photo:
05/12/2011
Nokia Xpress Music


இதையும் பார்க்கலாமே:

Story of the Photo 02: School Memories
https://scienceplusmovies.blogspot.com/2020/04/school-memories.html?m=1

நான் சந்தித்த ரிச்சர்ட் பார்க்கர்!
https://scienceplusmovies.blogspot.com/2020/05/theatre-story-richard-parker.html?m=1

Comments

Popular posts from this blog

Bajii in Different Style

"சமைக்கலாம் வாங்க" 4.0 பஜ்ஜி தேவையான பொருட்கள்: 1) வெங்காயம் - 4 2) உருளைக்கிழங்கு - 2 3) கேரட் -1 4) கொத்தமல்லி ஒரு கொத்து *மிளகாய்த்தூள், உப்பு - ருசிக்கேற்ப செய்முறை: ஒரு பாத்திரத்தில் துண்டுகளாக நறுக்கிய வெங்காயம், உருளைக்கிழங்கு, துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இத்துடன் ஐந்து தேக்கரண்டி கல்ல மாவு, ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள், 3/4 தேக்கரண்டி உப்பு, கொஞ்சம் பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் தெளித்து கலக்கவும். 15 நிமிடத்திற்கு அப்படியே​ விடவும். காரணம்: வெங்காயத்தில் இருக்கும் தண்ணீர் வெளியேறும். கலவை சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும். கெட்டியாக இருந்தால் தண்ணீரும் தண்ணீயாக இருந்தால் கல்ல மாவையும் சேர்த்து சரியான பததிற்கு கொண்டு வரவும். எண்ணைச் சட்டியில் மசால் வடைக்கு போடுவது போல் தட்டையாக போட்டு பொரித்து எடுத்தால் "4.0 பஜ்ஜி" தயார். குறிப்பு: இந்த கலவையில் தண்ணீரை சேர்க்காமல் பிசைந்து எண்ணையில் உதிர்த்து போட்டால் "பக்கோடா" தயார்.

Movies of 2018 - A Overview

2018ல் நான் பார்த்த திரைப்படங்கள் ஒரு பார்வை. நிமிர் - எதார்த்தமான கதையை அழகான கதாபாத்திரங்கள் மூலம் சொல்லப்பட்ட மலையாள மறு ஆக்கம். சில காட்சிகள் அழுத்தம் இல்லாமல் நகர்கிறது. படத்தின் நாயகனுக்கும் அவரின் தந்தைக்கும் நடக்கும் காட்சிகள் கவித்துவமானவை. ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் - நகைச்சுவை திரைப்படம் என்ற பெயரில் வந்து சிரிப்பை வரவைக்காத திரைப்படம். சவரக்கத்தி - நகைச்சுவை காட்சிக்குள் வாழ்க்கை தத்துவங்களை குறியீடாக வைத்து புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட திரைப்படம். கூட்டாளி - பணம் செலுத்தாதவர்களின் வண்டிகளை திருடும் நான்கு நண்பர்களைப் பற்றிய கதை. சுமாராக எடுக்கப்பட்ட சிறு பட்ஜெட் திரைப்படம். படத்தின் கடைசி 30 நிமிடங்கள் அருமை. நடிகையர் திலகம் - சாவித்திரி என்ற மகா நடிகையின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம். சமந்தா காட்சி பகுதிகளை தாராளமாக குறைத்திருக்கலாம். சாவித்திரி அவர்களை எண்ணி பிரமிப்பும் வருத்தமும் ஏற்ப்படுத்தி படம். இரும்புத் திரை - Cyber​ crime மற்றும் தொழில்நுட்ப வழி தகவல் திருட்டுகளை எளிதாக விளங்கிய படம். மக்கள் எந்த அளவுக்கு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பய

NTR Kathanayagudu - Movie Review

NTR கதாநாயக்டு - ஒரு பார்வை குறிப்பு: இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியாகியிருக்கிறது. ஆங்கில துணைத் தலைப்புகளும் இல்லை. இருந்தாலும் இது ஒரு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் என்பதாலும் திரைப்பட அனுபவத்திற்காகவும் பார்த்தேன். கதை: "நந்தமுரி தாரக ராமா ராவ்" எப்படி மக்கள் போற்றும்​ திரைக் கலைஞனாக உருவாகுகிறார் என்பதே "NTR கதாநாயக்டு". NTRஆக அவரது புதல்வரும் நடிகருமான பாலகிருஷ்ணா நடித்திருக்கிறார். தன்னுடைய ஆத்மார்த்தமான நடிப்பை தந்திருக்கிறார். வித்தியா பாலன் NTRரின் மனைவியாக அமைதியாக வந்து போகிறார். இவர்களைத் தவிர ஏகப்பட்ட நடிகர்கள் வந்து செல்கின்றனர். படத்தின் கலை வேலைகள் நன்றாக இருக்கிறது. குறிப்பாக பழைய காலத்தில் பயன் படுத்திய சினிமா படப்பிடிப்பு இடங்கள், படத்தொகுப்பு செய்யும் இயந்திரம், படச்சுருள் என நம்மை கால பயணம் செய்ய வைத்திருக்கிறார்கள். "பெரிய நடிகர் ஆன பின்னரும் தன் பழைய நண்பர்களை சந்தித்து பட வாய்ப்பு தருவது, மக்களின் துயரங்களை கண்டு வருந்துவது, ஒரு குடிசை வீட்டில் பூஜை அறையில் தன்னுடைய கிருஷ்ணர் வேசம் படத்தை கண்டு NTR நெகிழ்வது" போன்ற

Renugambal Temple, Padavedu.

ரேணுகாம்பாள் கோயில், படவேடு. திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் பேருந்தில் ஏறி "சந்தவாசல்" நிறுத்தத்தில் இறங்க வேண்டும். பயண நேரம் - ஒரு மணி நேரம். அங்கிருந்து பங்கு ஆட்டோ (share auto) மூலம் கோயிலை அடையலாம். பயண நேரம் - 15 நிமிடங்கள். படவேட்டில் ரேணுகாம்பாள் கோயிலை தவிர பல கோயில்கள் இருக்கிறது. Car அல்லது Bikeல் செல்பவர்கள் முக்கியமான அனைத்து கோயில்களையும் எளிதில் பார்த்து விடலாம். பேருந்தில் சென்றவர்கள் ரேணுகாம்பாள் கோயிலை பார்த்து விட்டு, கோயிலுக்கு அருகில் இருக்கும் ஆட்டோவை வாடகைக்கு எடுப்பது சிறந்த வழியாகும். அனைத்து கோயில்களையும் பார்க்க தோராயமாக இரண்டில் இருந்து மூன்று மணி நேரம் ஆகும். படவேட்டை சுற்றிப்பார்க்க சிறந்த நேரம்: காலை - 8 மணி முதல் 12 மணி வரை மாலை - 3 மணி முதல் 6.30 வரை விசாரித்த வகையில் நான் பார்க்கத் தவர விட்ட முக்கியமான இடங்கள்: 1) லட்சுமி நரசிம்மர் திருக்கோயில். 2) அம

இண்டிபெண்டண்ட் சினிமா - புத்தக விமர்சனம்

பலரின் சினிமா பார்வையையும் தேடலையும் தங்களின் காணொளிகளின் மூலம் விரிவடைய காரணமாக இருந்து வரும் "Missed Movies" YouTube சேனலிடம் இருந்து வெளிவந்திருக்கும் புத்தகமே "இன்டிபெண்டண்ட் சினிமா". தயாரிப்பாளரை மட்டுமே சார்ந்து இருக்காமல் படைப்பாளியின் கையில் இருக்கும் பொருளாதாரம் மற்றும் நண்பர்கள், தெரிந்தவர்களின் பண உதவியுடன் எடுக்கப்படும் சினிமாவே இன்டிபெண்டண்ட் சினிமா (சுயாதீன திரைப்படம்). இயக்குனரிடம் தயாரிப்பாளர் கதையில் செய்யச் சொல்லும் ஜனரஞ்சக மற்றும் வணிக மாற்றங்களே இதற்கு காரணம். இந்த புத்தகம் சுயாதீன திரைப்படத்தின் தொடக்க காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை எப்படி இயங்கி வருகிறது என ஒரு தகவல் களஞ்சியமாக இருக்கிறது. உலக சினிமா ஏன் பார்க்க வேண்டும்? என்ற விளக்கத்துடன் ஆரம்பமாகிறது இந்த புத்தகம். பிறகு சுயாதீன திரைப்படம் தொடங்கிய காலம், அதை முன்னெடுத்த இயக்குனர்கள் என நாம் இதுவரை அறிந்திராத தகவல் மற்றும் சம்பவங்களுடன் நகர்கிறது. கிட்டத்தட்ட சினிமா உலகில் நமக்கு மறைக்கப்பட்ட வரலாற்றை பிரம்பிப்புடன் படிப்பது போன்றதொரு உணர்வு. இந்த புத்தகத்தின் எழுத்

பறவை குறும்படத்தின் Storyboard

பறவை குறும்படம் https://youtu.be/skfi6l3QLFY

மொட்டை மாடி தீபாவளி!

  இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே தெருக்களில் "அகலு! அகலேய்....!" என  வியாபாரிகளின் கூக்குரல், கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி விட்டத்தை சொல்லும் அறிகுறிகளின் ஒன்று. பத்து நாட்கள் நடைபெறும் எங்கள் ஊர் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் மரத்தேரும், பத்தாம் நாள் தீபத் திருவிழாவும் மிகவும் பிரபலம். ஐந்தாம் திருவிழாவில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும். முதல் திருவிழாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக திருவிழா கலைக் கட்ட ஆரம்பிக்கும். மரத்தேரின் போது திருவிழா அதன் உச்ச நிலையை​ தொட்டு இருக்கும். உள்ளூரில் இருந்து வெளியூர்களுக்கு சென்றவர்கள் தங்கள் சொந்த வீட்டிற்கும் அல்லது சொந்தங்களின் வீட்டிற்கு வந்து சேர்ந்திருப்பார்கள். ஒன்பதாம் திருவிழாவன்று பல ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதற்கான சிறப்பு பேருந்துகளை இயக்க ஆரம்பித்து இருப்பார்கள். விடுமுறை கிடைக்காத திருவண்ணாமலை வாசிகள் எப்படியாவது தீபத்தை மட்டுமாவது பார்த்து விடவேண்டும் என அடித்து பிடித்து ஊரை நோக்கி தங்களின் பயணத்தை தொடங்கி இருப்பார்கள். தொலைக்காட்சியில் எல்லா சேனலில்கள

Vettavalam Village - A Photo Collection

Bazaar Street                               Vinoth Theatre Jameen Palace Singaara Kulam Manonmaniyamman Temple Aerial View - Vettavalam                          Anchineeyar Temple                      Agastheeswarar Temple Varatharaaja Perumal Temple Play Time - Goli Gundu St. Mary's Sacred Heart Chruch Black and White Hut Village WhatsApp Group Thallaakulam Market

Naveram - Short Story.

நவிரம் - சிறுகதை.       சீரான இடைவெளியில் மண்ணில் பாதி புதைந்திருந்த ரப்பர் டயர்களின் மீது மழலைகள் தாவியாடிக் கொண்டிருந்தார்கள். தொங்கும் கயிறு பாலம், மரப்பாலம், லாரி டயரினால் செய்யப்பட்ட குகை என பல வித்தியாசமான விளையாட்டுகளும்; ஊஞ்சல், சறுக்கு மரம், இரும்புக் கூண்டு, சீ-சா போன்ற வழக்கமான விளையாட்டுகளும் இருந்தது. பல வண்ணங்களில் தீட்டப்பட்டு இருந்த அனைத்து விளையாட்டுகளிலும், குழந்தைகள் ஆக்கிரமிப்பு செய்து இருந்தார்கள். அவர்களை தங்களின் கண் பார்வையிலேயே இருக்கும்படி பெற்றோர்கள் அருகிலேயே நின்று கவனித்துக் கொண்டார்கள். மழைநீர் சேகரிப்பு, மக்கும்-மக்காத குப்பை, டெங்கு ஒழிப்பு, நடைப் பயிற்சியின் பயன்கள், மனிதன் நிலவில் கால் பதித்த காட்சி, சூரியக் குடும்பம், கிரகணங்கள், மயில் வடிவில் இருக்கும் மாவட்டத்தின் வரைபடம் என பலப் படங்கள் பூங்காவின் சுற்று சுவர் முழுவதும் ஓவியமாக வரையப்பட்டு இருந்தது. ஆங்காங்கே போடப்பட்டு இருந்த சிமெண்ட் பெஞ்ச் அனைத்திலும் ஆட்கள் நிரம்பி இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பிள்ளைகளுடன் வந்தவர்களாகவும் சிலர் வேடிக்கை பார்த்து பொழுதை போக்க வந்தவர்களாகவும் இருந்தார்